தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் எனவும் 13 ஆவது திருத்தமே தீர்வு எனவும் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என வீரகேசரி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
''தமிழ் மக்களின் ஆதரவு எனக்குத் தேவையில்லை. அவர்களின் வாக்குகள் இல்லாமலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவேன்' எனத் தெரிவித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, தமிழ்க் கூட்டமைப்பை சந்திக்க ஆர்வமாக உள்ளதாகவும் கூறியுள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனை, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (05) கோத்தாபய ராஜபக்ஷ தனது இல்லத்தில் சந்தித்து 40 நிமிடங்கள் கலந்துரையாடியுள்ளார். கோத்தாபய மற்றும் சித்தார்த்தனைத் தவிர வேறு எவரும் இந்த சந்திப்பில் பங்கேற்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வது கஷ்டமாக இருக்கும் என்றும், மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட 75 ஆயிரம் வாக்குகளை அண்மித்தே உங்களுக்கும் (கோத்தாபாய ) வாக்குகள் கிடைக்கும் என்றும் இதன்போது சித்தார்த்தன் எம்.பி கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தொடர்பில், கோத்தாபய இதன்போது கருத்து வெளியிட்டுள்ளார். கட்சி தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்துடனேயே கதைக்கவேண்டும் என்று சித்தார்த்தன் பதிலளித்துள்ளார். அவரைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகக் கோத்தாபய குறிப்பிட்டதுடன், அவர் சந்திப்பாரா? என்று கேள்வி எழுப்பியதாகவும் சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார் என்பதைச் சுட்டிக்காட்டும் கோத்தாபய, அந்த வாக்குகளை சிங்களப் பகுதியிலேயே பெற்று விடுவேன் என்று தெரிவித்தாகவும், தமிழ் மக்களின் வாக்குகள் தனது வெற்றிக்குத் தேவையில்லை என்று குறிப்பிட்டதாகவும் சித்தார்த்தன் தெரிவித்தார்.
ஆனாலும், இலங்கை முழுவதிலிருந்தும் தனக்கு வாக்குகள் கிடைக்கப்பெற்றால்தான் சர்வதேச சமூகம் இலங்கையின் ஜனாதிபதியாக தன்னை ஏற்றுக்கொள்ளும் என்றும் கோத்தாபய இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 80 சதவீதமான மக்கள் வாக்களித்திருந்தாலும் இப்போது, அதே எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிப்பது சந்தேகம் என்றும், மக்கள் எல்லோரிலும் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்றும் கோத்தாபயவுக்கு எடுத்துரைத்தாக சித்தார்த்தன் தெரிவித்தார்.
13 ஆவது திருத்தத்தில் பல விடயங்கள் இருக்கின்றன எனவும், பொலிஸ் அதிகாரம் வழங்கினாலும் முழுமையான பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாது எனவும் கோத்தாபய கூறியதாக சித்தார்த்தன் தெரிவித்தார்.
காணி அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்க முடியாது என்பதில் கோத்தாபய உறுதியாக இருப்பது அவரது பேச்சில் தெரிந்தது. அதற்கு அவர் கடந்த காலத்தில், வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன்,பெரிய முதலீடு ஒன்றைத் தடுத்ததை உதாரணமாகச் சுட்டிக்காட்டியதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
மேலும், அரசியல் விடயங்களை எம்.ஆர். (மஹிந்த ராஜபக்ஷ பார்த்துக் கொள்ளுவார் என்று கோத்தபாய தனது சந்திப்பில் கூறியதாக சித்தார்த்தன் தெரிவித்தார்.